வயிற்றில் 15 மாதக் குட்டியுடன் தாய் யானை பரிதாப பலி: துப்பாக்கிச் சூட்டு காயம் காரணமென சந்தேகம்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்-
புத்தளம் மாவட்டத்தின் செல்லக்கண்டல் வனப்பகுதியில் 15 மாதக் குட்டியை வயிற்றில் சுமந்திருந்த தாய் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட கண்காணிப்பின் போது, சுமார் 35 முதல் 40 வயதுடையதும் 8 அடி உயரமுடையதுமான பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து யானையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
உடற்கூற்றுப் பரிசோதனையின் போது, அந்த யானையின் வயிற்றில் சுமார் 15 மாதங்கள் வளர்ச்சியடைந்த குட்டி யானையின் பாகங்கள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பிறக்கத் தயாராக இருந்த குட்டி யானையும் தாயுடன் சேர்ந்து உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் தகவலின்படி, குறித்த யானை கடந்த பல மாதங்களாக செல்லக்கண்டல் வனப்பகுதியில் சுற்றித்திரிந்ததுடன், அதன் கால்களில் ஏற்பட்டிருந்த காயங்களுக்காக பல தடவைகள் சிகிச்சைகளும் வழங்கப்பட்டிருந்தன.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், யானையின் கால்களில் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அந்த காயங்களின் ஊடாக ஏற்பட்ட கடுமையான கிருமித் தொற்று மற்றும் விஷத் தாக்கமே யானையின் மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விரிவான உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிக்கவெரட்டிய மிருக வைத்திய காரியாலயத்தின் வைத்திய அதிகாரி ஏ.எம்.பி.எம். அசாசூரிய தலைமையிலான மருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒரு தாய் யானையும் அதன் பிறக்காத குட்டியும் இவ்வாறு உயிரிழந்துள்ள சம்பவம் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

