நாவற்குடாவில் மோட்டார் சைக்கிள் விபத்து: காத்தான்குடி இளைஞர்கள் இருவர் படுகாயம் – மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்.!!!
மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் நேற்று (15) இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று நாவற்குடா உள்வீதியில் தேவாலயம் அருகில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காத்தான்குடியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இரண்டு மோட்டார்சைக்கிள்களில் அதிவேகமாக நாவற்குடா உள்வீதியொன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதில் ஒரு மோட்டார்சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த மதிலுடன் மோதியுள்ளது.இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்த இரு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இளைஞர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல் பயணித்தமையே படுகாயமடைவதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நாவற்குடா பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






