ஆலங்குடா கடற்பரப்பில் கடற்படையின் அதிரடி: பெருமளவு பீடி இலைகள், மருந்துப் பொருட்கள் பறிமுதல்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
நுரைச்சோலை ஆலங்குடா கரையோரப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட பெருமளவிலான பீடி இலைகள் மற்றும் மருந்துப் பொருட்களுடன் கூடிய டிங்கி படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படையின் விஜய நிறுவனம் வியாழக்கிழமை (11) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, நுரைச்சோலை ஆலங்குடா கரையோரப் பகுதியை அண்மித்த கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமாக மிதந்துகொண்டிருந்த டிங்கி படகொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட 177 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகள், சுமார் 354,000 மருந்து மாத்திரைகள், மருந்துக் களிம்புகள் அடங்கிய 7,673 பொதிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய 118 போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த சரக்குகளை கடத்தல்காரர்கள் நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வர முயற்சித்த நிலையில், கடற்படையினரின் திடீர் நடவடிக்கையால் அவற்றைக் கைவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், மருந்துப் பொருட்கள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.



