கடற்படையின் அதிரடி; நாட்டுக்குள் கடத்த முயன்ற 71,960 மருந்து மாத்திரைகள் பறிமுதல்.!!!
–கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்–
கற்பிட்டி கீரிமுந்தல் கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட 71,960 மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடமேற்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் ‘விஜய’ நிறுவனத்தினரால் நேற்று (10) முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கீரிமுந்தல் கடற்கரைப் பகுதியில் புதர்க்காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு பொதியை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 71,960 மருந்து மாத்திரைகள் மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட மருந்துப் பொருட்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
