மென்பொருள் கோப்புகள் மூலம் புதிய நிதி மோசடி – பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை.!!!
வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களின் மூலம் அனுப்பப்படும் ஆபத்தான மென்பொருள் கோப்புகள் (APK files) வழியாக மேற்கொள்ளப்படும் புதிய வகை நிதி மோசடிகள் தொடர்பில் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருமண அழைப்பிதழ்கள், மின்சாரக் கட்டணப் பட்டியல் அல்லது அதிர்ஷ்ட இலாப அறிவிப்பு போன்ற பெயர்களில் இந்த மோசடி கோப்புகள் அனுப்பப்படுவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கோப்புகளை தரவிறக்கம் செய்து திறக்கும் போது கையடக்கத் தொலைபேசியில் தீங்கிழைக்கும் மென்பொருட்கள் ஊடுருவி, தொலைபேசியின் செயல்பாடுகளை மோசடிக்காரர்கள் கட்டுப்படுத்தக்கூடிய நிலை உருவாகும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வங்கிக் கணக்குகளுடன் தொடர்புடைய இரகசிய OTP இலக்கங்களை திருடி, பண மோசடிகளில் ஈடுபடுவதாகவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
எனவே, அறிமுகமில்லாத அல்லது சந்தேகத்திற்குரிய நபர்களிடமிருந்து வரும் எந்தவொரு கோப்பையும் திறக்க வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள “Install Unknown Apps” என்ற தெரிவை செயலிழக்கச் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செயலிகளை தரவிறக்கம் செய்யும் போது எப்போதும் உத்தியோகபூர்வமான Google Play Store அல்லது Apple App Store போன்ற பாதுகாப்பான தளங்களை மட்டுமே பயன்படுத்துமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.