சுகாதார சேவையில் 116 பட்டதாரிகளுக்கு புதிய வாய்ப்பு; நியமனங்கள் மற்றும் பயிற்சிகள் ஆரம்பம்.!!!
சுகாதார சேவையில் இணைக்கப்படும் வகையில் 52 பேச்சு சிகிச்சை பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு பயிற்சித் திட்டத்திற்காக 64 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான நியமன மற்றும் ஆட்சேர்ப்புக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (13) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் உயிரியல் மருத்துவப் பொறியியல் பிரிவின் புதிய நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், சுகாதார சேவையில் இணையும் ஒவ்வொருவரும் இதனை வெறுமனே அரசாங்கப் பதவியாகக் கருதாமல், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை குணப்படுத்தவும், உயிர்களைக் காப்பாற்றவும், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பங்களிக்கும் அரிய வாய்ப்பாகக் கருத வேண்டும் என தெரிவித்தார்.
சுகாதார சேவையின் மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தற்போது அவசர ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சுகாதார சேவை விரிவுபடுத்தப்பட்டு வருவதால் இத்தகைய ஆட்சேர்ப்புகள் அத்தியாவசியமானவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், சுகாதார சேவைக்கான ஆட்சேர்ப்புகள் விரைவுபடுத்தப்பட்டுள்ள அதேவேளையில், பதவி உயர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நாட்டிற்குத் தேவையானது திறமையான அரச சேவையாகும் எனவும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் நிலையில், எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு அதிகளவிலான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சுகாதார சேவைக்காக ஒதுக்கப்பட்ட நிதி எந்த வகையிலும் குறைக்கப்படாது என வலியுறுத்திய அமைச்சர், சுகாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கட்டட வசதிகளை தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.





