சட்டவிரோதமாக ஏற்றிவரப்பட்ட ஆறு மாடுகளில் ஒன்று உயிரிழப்பு – ஒருவர் கைது: இறந்த மாட்டின் மீது பிரேத பரிசோதனை.!!!
(ஜே.கே)
அனுமதிப் பத்திர விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் வெலிகந்தையிலிருந்து நிந்தவூருக்கு சிறிய ரக பட்டா லொறியொன்லில் ஏற்றிவரப்பட்ட ஆறு மாடுகளில் ஒரு மாடு இறந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவி்த்தனர்
நேற்று மாலை (16) மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவிற்கு கிடைத்த தகவலின் பேரில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் வைத்து குறித்த பட்டா ரக வாகனத்தை கைப்பற்றியதுடன் மிருக வதைச் சட்டத்தின்கீழ் ஒருவரை கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த வாகனத்தில் அடைத்து கொண்டு வரப்பட்ட ஆறு மாடுகளில் ஒரு மாடு இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த மாடு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பொலிசார் முன்னிலையில் காத்தான்குடி கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்கள கால்நடை வைத்தியர் எஸ்.மரியா ஹர்சினியினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் மற்றும் மாடுகளை மட்டக்களப்பு நீதவான் நீதீமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்தாக பொலிசார் தெரிவித்தனர்.




