யாழ்ப்பாணத்தில் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிர்ப்பு; 10 அடி உயர பதாகைக்கு செருப்பு மாலை.!!!
யாழ்ப்பாண பிரதான வீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை ஒன்று வைக்கப்பட்டு, அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தகாத வார்த்தைப் பிரயோகங்கள், சபை நாகரிகத்திற்கு முரணான நடத்தை மற்றும் கூட்டங்களை குழப்பும் வகையிலான செயற்பாடுகளில் அர்ச்சுனா இராமநாதன் ஈடுபட்டு வருவதாக பல்வேறு தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று (18) தெல்லிப்பளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, அவை பொதுமக்கள் மத்தியில் பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், யாழ்ப்பாண பிரதான வீதியில் அவரது உருவப்படத்துடன் கூடிய 10 அடி உயர பதாகை அமைக்கப்பட்டு அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது தொடர்பில் இதுவரை எந்த உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை.