ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டறிந்து; நீதியை நிலைநாட்டக் கோரி -கொழும்பு கோட்டையில் அமைதி ஆர்ப்பாட்டம்.!!!
ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை கண்டறிந்து, பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கச் செய்வதுடன், பாரபட்சமற்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (16) நண்பகல் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
சமூக நீதிக் கட்சியும் பல்வேறு அமைப்புகளும் சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஈஸ்டர் தாக்குதலுக்கான முழுமையான உண்மைகளை வெளிக்கொணர வேண்டுமெனவும், சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் முழுமையான ஆதரவு தங்களுக்குண்டு என்றும், தாக்குதலில் உயிரிழந்த கத்தோலிக்க மக்களின் குடும்பத்தினரின் துயரத்தில் தாங்களும் பங்கெடுக்கின்றோம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் அர்க்கம் முனீர் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


