தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் போலியாக தயாரித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது – காத்தான்குடியில் அதிர்ச்சி சம்பவம்.!!!
காத்தான்குடியைச் சேர்ந்த யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், போலியான தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை தயாரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 4ஆம் திகதி மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட வீதி சோதனை நடவடிக்கையின் போது, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஒருவரிடம் ஆவண சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை காண்பித்துள்ளார்.
ஆனால் அந்த ஆவணம் 2024ஆம் ஆண்டு யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற விபத்து ஒன்றின் போது கைப்பற்றப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட போலியான ஆவணம் என பின்னர் தெரியவந்துள்ளது.
விசாரணையில், குறித்த கான்ஸ்டபிள் கடந்த 2024 ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் போலியான தற்காலிக அனுமதிப் பத்திரங்களை தயாரித்து வழங்கி வந்ததுடன், போலியான கோப்பாய் பொலிஸ் நிலைய முத்திரையையும் பயன்படுத்தி 8 தடவைகள் அவற்றை நீட்டித்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போலி முத்திரை ஒன்று மீட்கப்பட்டதாகவும், அதனை பயன்படுத்தியதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, போலியான அனுமதிப் பத்திரத்துடன் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் வாக்குமூலம் பெற பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் நாளை (13) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.