திருட்டு விசாரணை பெயரில் நகை, பணம் கைப்பற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது.!!!
வாழைச்சேனை பகுதியில் வீடு புகுந்து திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்தை, விசாரணை என்ற பெயரில் திருடனிடமிருந்து பெற்றுக் கொண்டு தன்வசம் வைத்திருந்ததாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (29) மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடு ஒன்றில் கடந்த 21ஆம் திகதி 65 ஆயிரம் ரூபா பணமும், சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களும் திருடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், நாவலடி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை செவ்வாய்க்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முன்னதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி, தற்போது ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், திருடனின் வீட்டிற்கு சென்று தாம் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதாகக் கூறி, திருடப்பட்ட நகைகளையும் பணத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அந்தத் திருட்டுப் பொருட்களை தனது நண்பர் ஒருவரிடம் பாதுகாப்பாக வைக்குமாறு கொடுத்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திலிருந்து விசேட கடமை நிமித்தம் பாசிக்குடா சுற்றுலா மையத்தில் பணியாற்றி வந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை, உதவி பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய கல்குடா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவரது நண்பரிடம் இருந்த திருடப்பட்ட தங்க நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை வாழைச்சேனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.