இளைஞர்களை குறிவைத்து ‘ஐஸ்’ விநியோகம்; இரகசிய தகவலில் பொலிஸ் அதிரடி.!!!
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதியில் இளைஞர்களுக்கு சூட்சுமமான முறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளை விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய நபரொருவர் இன்று (02) சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி என். றிபாய்டீனுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 970 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், ஒரு மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி, நிறுத்தல் தராசு மற்றும் போதைப்பொருள் பொதியிட பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பிளாஸ்டிக் குழாய்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபருக்கு ஏற்கனவே மூன்று பிடியாணைகள் நிலுவையில் உள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவரை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரைக்கமைவாகவும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிலும், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியின் வழிகாட்டலிலும் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் மேற்பார்வையில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.