ரூ.40,000 இலஞ்சம் பெற்ற பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கையும் களவுமாக கைது.!!!
ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் ரூ.40,000 இலஞ்சப் பணத்தை பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று – சாகாமம் வீதியில் வைத்து குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் ஒருவரினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட நடவடிக்கையை முன்னெடுத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள், குறித்த உத்தியோகத்தர் இலஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் அவரை கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட உத்தியோகத்தர் தற்போது அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெறுவதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் இலஞ்ச குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், எதிர்வரும் நாட்களில் மேலும் சில அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.