பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இவ்வருட இறுதிக்குள் ரத்து: குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது – ஜனாதிபதி.!!!
நாட்டில் சில மாதங்களுக்குள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) முழுமையாக ரத்து செய்யப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் உரையாற்றுகையில், நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல்கள் மற்றும் படுகொலைகளை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை என சுட்டிக்காட்டினார். குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது, அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என நம்புவதாகவும், விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகளை எதிர்க்கட்சியினர் இலக்கு வைத்தாலும் நீதியை நிலைநாட்டும் பயணம் எக்காரணம் கொண்டும் இடைநடுவில் நிற்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் பின்னணியுடன் இயங்கும் பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் முற்றாக ஒழிக்கப்படும் என உறுதியளித்த ஜனாதிபதி, வெளிநாடுகளில் உள்ள சாட்சிகளிடமிருந்து ஆதாரங்களைப் பெறுவதை எளிதாக்கும் வகையில் சட்ட வரம்புகள் விரிவுபடுத்தப்படும் என்றார். அத்துடன், அரசாங்கம் நீதித்துறையிலோ அல்லது ஊடகங்களின் சுதந்திரத்திலோ தார்மீக எல்லையைத் தாண்டி தலையீடு செய்யாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.