பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் கைது – மாணவிகளை அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு.!!!
மாத்தளை மாவட்டத்தில் பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், பிரத்தியேக வகுப்பு (Tuition Class) ஆசிரியர் ஒருவர் இன்று (29) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லக்கல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த ஆசிரியர், தனது பிரத்தியேக வகுப்புகளுக்கு வருகை தரும் மாணவிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, பின்னர் அவர்களை காரில் அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பயன்படுத்திய சொகுசு காரொன்றையும் லக்கல பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மாணவிகளை மாத்தளை – நக்கிள்ஸ் (Knuckles) சூழல் பகுதிக்கு அழைத்து சென்று, தனது வாகனத்திற்குள்ளேயே வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக விசாரணைகளில் பல தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதற்கு முன்னர், குறித்த ஆசிரியரை மாணவியொருவரின் தந்தை தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த முறைப்பாடு தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்து மேற்கொண்ட விரிவான விசாரணைகளின் போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லக்கல, பகமூன மற்றும் நாவுல உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பிரபலமானவராக கருதப்படும் இந்த ஆசிரியர், தனது பிரத்தியேக வகுப்புகளுக்கு வரும் மாணவ – மாணவிகளுக்கு இடையே காதல் தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளும் சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி கொடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி ஆசிரியரும் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.