கண்டியின் சில பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை; கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரிக்கும் அபாய அறிவிப்பு.!!!
கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை ஆகஸ்ட் 03 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் ஆகஸ்ட் 04 ஆம் திகதி காலை 9.00 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை மற்றும் கங்கா இஹல கோரளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மட்டம் 3 (சிவப்பு) நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, உடுதும்பாறை, யட்டியாந்தோட்டை, அம்பகமுவை மற்றும் இரத்தினபுரி பகுதிகளுக்கு மட்டம் 2 (அம்பர்) எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பான்வில, தெரணியகல மற்றும் குருவிட்டை பகுதிகளுக்கு மட்டம் 1 (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்கள் நிலச்சரிவு அபாயம் தொடர்பாக மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மலைச்சரிவு, மண்சரிவு, பாறை உருளல் மற்றும் மரங்கள் சாய்வதற்கான அபாயம் அதிகரித்துள்ளதால், அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

