டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு ரூ.30 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள்.!!!
–கற்பிட்டி எம்.எச் எம்.சியாஜ்–
டித்வா புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், சுயதொழில் உதவிகளாக உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் காசோலைகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (10) பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
பாலாவி பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் ஒருங்கிணைப்பிலும், கொழும்பைத் தளமாகக் கொண்ட எஸ்.எல்.சி.டி.எப். (SLCDF) மற்றும் பள்மேரா (PALMERA) நிறுவனங்களின் நிதி அனுசரணையுடனும் இந்த வாழ்வாதார உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நம்பிக்கையகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜூவைரியா முகைதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நம்பிக்கையகத்தின் தலைவி ஹபீபா மொஹமட் றிஸ்மி, திட்ட இணைப்பாளர் எஸ். சுமித்ரா, பொருளாளர் பஹீமா பேஹம், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எச். நியாஸ், நீதிமன்ற சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் ஏ.சி. அஸாருதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
டித்வா புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு, குறிப்பாக தொழில் பதிவு செய்யப்படாத சிறு முயற்சியாளர்களான பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் முதற்கட்டத்தில் 21 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும், இரண்டாம் கட்டத்தில் 29 குடும்பங்களுக்கும் என மொத்தம் 50 பயனாளிகளுக்கு சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
பெண்களின் பொருளாதார வலிமையையும் சமூக முன்னேற்றத்தையும் மேம்படுத்தும் நோக்குடன், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீள உருவாக்குவதற்காக பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக கள உத்தியோகத்தர் டி. சமீமா தெரிவித்தார்.








