மட்டக்களப்பில் மனிதப் பாவனைக்கு ஒவ்வாத உணவு விற்பனை: நீதிமன்றம் 14 நாள் மூடல் உத்தரவு.!!!
மனிதப் பாவனைக்கு ஒவ்வாத மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மட்டக்களப்பு நகரிலுள்ள ஒரு உணவகத்தை 14 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு அருகில் நீண்டகாலமாக இயங்கி வந்த குறித்த உணவகத்திற்கு எதிராக கடந்த 22ஆம் திகதி பொது சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து உணவகத்தின் நிர்வாகி நேற்று (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு இன்று (27) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, மனித நுகர்வுக்குத் தகுதியற்ற மற்றும் பழுதடைந்த உணவுப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை, உரிய அனுமதியின்றி உணவு தயாரிக்கப்பட்டமை மற்றும் அசுத்தமான சூழலில் உணவகம் நடத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு சுகாதார மீறல்கள் நீதிமன்றில் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டன.
மேலும், கழிவு நீர் முறையாக அகற்றப்படாதமை, சமையலறைக்குள் பூனைகள் நடமாடியமை மற்றும் திறந்தநிலை கழிவுத் தொட்டிகள் பயன்படுத்தப்பட்டமை போன்ற கடுமையான சுகாதாரக் குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டன.
வழக்கை ஆராய்ந்த நீதவான், உணவகத்தில் காணப்பட்ட அனைத்து சுகாதாரக் குறைபாடுகளும் முழுமையாகச் சரிசெய்யப்படும் வரை 14 நாட்களுக்கு உணவகத்தை மூடி வைக்குமாறு உத்தரவிட்டார்.
அதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உணவக நிர்வாகி நிபந்தனைப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவையடுத்து, பொது சுகாதாரப் பரிசோதகர்கள் குறித்த உணவகத்திற்குச் சென்று அதனை மூடி சீல் வைத்தனர்.


