பெண்களை குறிவைத்து தங்கச் சங்கிலி பறித்த தொடர் கொள்ளையன் ஹெரோயினுடன் கைது.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
வென்னப்புவ – தங்கொட்டுவ வீதியில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வந்து தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்றதாகக் கூறப்படும் கொள்ளையன் ஒருவரை தங்கொட்டுவ பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் வென்னப்புவ, பொரலஸ்ஸ – கொஸ்கஹவத்த பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வென்னப்புவ பொரலஸ்ஸ பகுதியில் பெண் ஒருவர் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கண் இமைக்கும் நேரத்திற்குள் அவர் அணிந்திருந்த பதக்கத்துடன் கூடிய தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக தங்கொட்டுவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, பொலிஸார் துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தப்பியோடிய சந்தேக நபரை பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று கைது செய்ததுடன், அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபரிடமிருந்து 5610 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கொள்ளைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அதேவேளை, வென்னப்புவ, தங்கொட்டுவ மற்றும் கதானேகெதர பகுதிகளில் இதே பாணியில் பெண்களின் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற பல சம்பவங்களுடனும் சந்தேக நபருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை அடகு வைத்து பெற்ற பணத்தை போதைப்பொருள் தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்கொட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான நிஷாந்த அப்புஹாமி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.