டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு; பல இளைஞர்கள் கைது – 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்.!!!
டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததுடன், தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் பல இளைஞர்கள் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, பயன்படுத்தப்பட்ட 8 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியின் வழிகாட்டலின் கீழ், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த பிரதீப் குமார மற்றும் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி விஜயவர்தன ஆகியோர் தலைமையில் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் குறித்த இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த பிரதீப் குமார, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பான காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களை உடனடியாக பொலிஸாருக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்மாந்துறையை சட்டம் மற்றும் ஒழுக்கம் நிலவும் பாதுகாப்பான பிரதேசமாக மாற்றுவதே தங்களின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டியதன் அவசியத்தையும், பெண்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயலும் கடுமையாகக் கருதப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
அதேவேளை, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் வாகனப் பயன்பாடு, நண்பர்கள் வட்டம் மற்றும் அன்றாட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் கவனத்துடன் இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.