ஏழு வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகநபருக்கு விளக்கமறியல்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
ஏழு வயது சிறுமியை கடைக்கு அழைத்துச் செல்வதாக கூறி அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாதம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ராகல – லுணுகலை தோட்டத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் காக்கபள்ளிய – வாலஹேன பகுதியில் உள்ள தென்னை நார் உற்பத்தி மில்லில் தொழிலாளராக பணியாற்றி வந்ததாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும் அதே மில்லில் பணியாற்றுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 24 ஆம் திகதி மாலை நேரத்தில், குறித்த சிறுமியையும் அவரது சகோதரனையும் கடைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சந்தேகநபர் அழைத்து சென்றுள்ளார். எனினும், சிறிது நேரத்தில் சிறுவன் மட்டும் தனியாக வீட்டிற்கு திரும்பியதால், சந்தேகமடைந்த சிறுமியின் தாய் மகளைத் தேடி சென்றுள்ளார்.
அப்போது வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாய்க்கு அருகில் சிறுமி அரைவாசி ஆடைகளுடன் இருப்பதை தாய் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தாயின் விசாரணையில், சந்தேகநபர் தன்னிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை அக்கம் பக்கத்தினர் பிடித்து மாதம்பே பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.