கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிர்ச்சி – 110 கோடி ரூபாய் போதைப்பொருளுடன் 22 தேரர்கள் கைது.!!!
இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (கட்டுநாயக்க) இதுவரை காணாத மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 110 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ‘குஷ்’ (Kush) மற்றும் ‘ஹாஷிஷ்’ (Hashish) போதைப்பொருட்களுடன் 22 பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையின் போது இந்த குழு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் அடங்கிய பெட்டிகளில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 110 கிலோ போதைப்பொருட்கள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரிடமும் 5 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஸ்பான்சர் ஒருவரின் ஏற்பாட்டில் இவர்கள் தாய்லாந்தின் பாங்காக் சென்றிருந்ததாகவும், அங்கு சாதாரண உடையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர்களின் கைப்பேசிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் தேரர்கள் என்றும், சிலர் உயர்கல்வி பயிலும் நிலையில் இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் பிடிப்பாகவும், தேரர்கள் இவ்வளவு பெரிய கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட முதல் நிகழ்வாகவும் பதிவாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

