உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்; புதிய அதிர்ச்சி தகவல் வெளியீடு.!!!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு உயர்மட்டத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்ததற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முன்னரே, அது குறித்த மிகத் தெளிவான புலனாய்வுத் தகவல்கள் பாதுகாப்பு உயர்மட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்ததை உறுதிப்படுத்தும் வாட்ஸ்அப் (WhatsApp) தகவல் பரிமாற்றங்களின் பிரதிகள் தற்போது வெளியாகியுள்ளன.
வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவிடமிருந்து கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது சகாக்கள் இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் இந்தியர்கள் தங்கும் ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததை அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன அப்போதைய பாதுகாப்புச் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரியப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, ஏப்ரல் 16 ஆம் திகதி காத்தான்குடியில் நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் வெடிப்புச் சம்பவம் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதி என்றும், ஏப்ரல் 21 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகத் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அந்த எச்சரிக்கை செய்தியில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தகவலைப் பெற்றுக்கொண்டதாகப் பாதுகாப்புச் செயலாளர் உறுதிப்படுத்தியிருந்ததுடன், பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) உள்ளிட்ட முக்கிய தரப்புகளுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகப் புலனாய்வுப் பணிப்பாளரும் பதிலளித்துள்ளார்.
இவ்வாறான மிகத் தெளிவான மற்றும் தீர்க்கமான புலனாய்வுத் தகவல்கள் தாக்குதலுக்குப் பல நாட்களுக்கு முன்னரே கிடைக்கப் பெற்றிருந்தும், அவை உரிய முறையில் கையாளப்படவில்லை என்பது இந்த ஆவணங்கள் மூலம் புலனாகிறது.
இத்தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜனாதிபதி உட்பட நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட அனைத்து உயர் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து உடனடியாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருந்தால், அல்லது குறைந்த பட்சம் அரச ஊடகங்கள் மூலமாகவாவது பொதுமக்களுக்கு அறிவித்திருந்தால் கூட நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியாவதைத் தடுத்திருக்க முடியும் அல்லவா?

