ஏறாவூர் 11 வயது சிறுமி உயிரிழப்பு சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்: 15 வயது அண்ணன் கைது.!!!
–செங்கலடி நிருபர் சுபஜன்–
ஏறாவூர் 5ஆம் குறிச்சி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 11 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் வெளியாகியுள்ளன.
கைப்பேசி பயன்பாட்டை மையமாகக் கொண்டு அண்ணன் மற்றும் தங்கைக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் விளைவாக இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற வேளையில் பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில், 15 வயதுடைய அண்ணனுக்கும் 11 வயதுடைய தங்கைக்கும் இடையில் கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது கோபமடைந்த அண்ணன், தனது தங்கையின் கழுத்தை நெரித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சிறுமி மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவத்தை மறைக்க முயன்ற அண்ணன், உயிரிழந்த தங்கையின் உடலை இழுத்துச் சென்று குளியலறைக்குள் வைத்துள்ளார். பின்னர் வாளி ஒன்றில் நீரை நிரப்பி, சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவரது தலையை நீர் வாளிக்குள் திணித்து விபத்தாக சித்தரிக்க முயன்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், உடற்கூற்றுப் பரிசோதனையின் முடிவுகள் மற்றும் ஏறாவூர் பொலிஸாரின் தீவிர விசாரணைகளின் போது சம்பவத்தின் உண்மை நிலை அம்பலமானது.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயதுடைய சந்தேக நபரான அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.