உடலில் மறைத்து மின்னணு சாதனங்கள் கடத்தல்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் 9 சீனர்கள் கைது.!!!
உடலில் மறைத்து கொண்டு வந்த ரூ.24 மில்லியன் பெறுமதியான மின்னணு சாதனங்களுடன் 9 சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை (15) சீனாவின் குன்மிங் நகரிலிருந்து இலங்கைக்கு வந்த இவர்கள், விமான நிலையத்தின் “கிரீன் சேனல்” பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உடலிலும் ஆடைகளிலும் செலோடேப்பால் மறைத்து வைத்திருந்த மின்னணு தொடர்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ரூ.17.5 மில்லியன் பெறுமதியான 383 பயன்படுத்தப்பட்ட கைப்பேசிகள், ரூ.6.47 மில்லியன் பெறுமதியான 101 டேப்லெட் கணினிகள் மற்றும் ரூ.30,000 பெறுமதியான GPS ட்ராக்கர்கள் பொருத்தப்பட்ட 6 WiFi ரவுட்டர்கள் அடங்குகின்றன.
இறக்குமதி விதிமுறைகளை மீறி இந்த சாதனங்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கண்டறியப்பட்டதால், அவற்றை பறிமுதல் செய்ய இலங்கை சுங்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.