சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சவர்க்காரம், ஷாம்பு உள்ளிட்ட பொருட்கள் கடற்படையால் கைப்பற்றம்.!!!
-கற்பிட்டி எம். எச். எம். சியாஜ்-
கற்பிட்டி கண்டக்குழி குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நுகர்வு பொருட்கள் அடங்கிய தொகுதியுடன் இரண்டு (02) படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தினால் திங்கட்கிழமை (15) மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், குறித்த கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு படகுகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது, அந்தப் படகுகளில் இருந்த முப்பது (30) பொதிகளில் சுமார் எட்டாயிரத்து நூறு (8,100) சவர்க்காரங்களும், சுமார் எட்டாயிரத்து அறுநூற்று நாற்பது (8,640) ஷாம்பு பக்கெட்டுகளும் கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட சட்டவிரோத நுகர்வு பொருட்களும் இரண்டு படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.



