2027 வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, தொழிற்கல்விக்கு விசேட நிதி; மாணவர் நலனுக்கு முன்னுரிமை.!!!
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வித் துறைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக விசேட நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம் நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, கல்வித் துறையின் எதிர்கால மறுசீரமைப்புகள், மாணவர் நலன்புரித் திட்டங்கள், அமைச்சின் கீழ் செயல்படும் பிரிவுகள் மற்றும் நிறுவனங்களின் 2026 செயற்பாடுகள், 2027 நிதி ஒதுக்கீட்டு தேவைகள் ஆகியவை விரிவாக ஆராயப்பட்டன.
புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு இணையாக தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் 2027 வரவு செலவுத் திட்டத்தில் உறுதி செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், 2027–2031 காலப்பகுதிக்கான கல்வித் துறையின் டிஜிட்டல் மாற்றுத் திட்டம் உள்ளிட்ட பரிந்துரைகளும் பரிசீலிக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்களுக்கான நலன்புரித் திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் தயாரிக்குமாறும், மாணவர் உதவித்தொகைத் திட்டங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பங்களிப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இதற்கான முன்மொழிவுகளை விரைவாக சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கொடுப்பனவுகள், கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகைகளை அதிகரித்தல், உயர்கல்வி மாணவர்களுக்கான விடுதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அனைத்து துறைகளிலும் நிலவும் ஊழியர் பற்றாக்குறை, சம்பளம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வுகளை விரைவாகக் காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

