சிறைச்சாலை கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண; ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்.!!!
கொழும்பு, ஜூலை 20: நாட்டின் சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சிறைச்சாலை கட்டமைப்பில் காணப்படும் சவால்கள், அவற்றைத் தீர்ப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது, சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியான தீர்வுகளை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், சிறைச்சாலை வசதிகளை விரிவுபடுத்துதல், புதிய வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் அதற்கான மாற்று நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.




