எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட திட்டங்கள்; அமைச்சரவை உபகுழு அவசர ஆய்வு.!!!
எதிர்வரும் எல்-நினோ காலநிலை தாக்கங்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு இரண்டாவது முறையாக கூடி முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், எல்-நினோ நிலைமையால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
உலக வானிலை அமைப்பின் கணிப்புகளின்படி, எல்-நினோ நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 81 சதவீதமாக காணப்படுவதாகவும், இதனால் விவசாயம், உணவுப் பாதுகாப்பு, பெருந்தோட்டத் துறை, நீர் முகாமைத்துவம் மற்றும் வலுசக்தி துறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்படி, எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள ஒவ்வொரு துறைக்கும் உரிய அரச நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்டகால செயல் திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை முன்னறிவிப்புகள், பாதிக்கப்படக்கூடிய துறைகளுக்கான தீர்வுகள் மற்றும் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், அரச உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
எல்-நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய சவால்களை முன்கூட்டியே எதிர்கொள்ள அரசாங்கம் பல்துறை திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.






