இந்தியா குறித்த நேர்மறையான பார்வையில் இலங்கை முதலிடம் – பியூ ஆய்வு.!!!
இந்தியா தொடர்பில் நேர்மறையான பார்வையைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக பியூ ஆராய்ச்சி மையத்தின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் 36 நாடுகளைச் சேர்ந்த 42,000க்கும் மேற்பட்டோரிடம் இந்த ஆண்டு பெப்ரவரி முதல் மே மாதம் வரை நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஆய்வில் பங்கேற்றவர்களில் உலகளவில் சராசரியாக 45 சதவீதமானோர் இந்தியா குறித்து சாதகமான கருத்தையும், 41 சதவீதமானோர் எதிர்மறையான கருத்தையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்தியா தொடர்பில் 79 சதவீதமானோர் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதேவேளை, 11 சதவீதமானோர் மட்டுமே எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும், 63 சதவீதமான இலங்கையர்கள் இந்தியாவை தங்களின் முக்கியமான நட்பு நாடாக அடையாளப்படுத்தியுள்ளனர். கடந்த 2024ஆம் ஆண்டில் இலங்கையில் இந்தியா தொடர்பான சாதகமான பார்வை 65 சதவீதமாக காணப்பட்ட நிலையில், தற்போது அது மேலும் அதிகரித்துள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பாகிஸ்தானில் 91 சதவீதமானோர் இந்தியா குறித்து எதிர்மறையான பார்வையைக் கொண்டுள்ளதாகவும், 7 சதவீதமானோர் மட்டுமே சாதகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, துருக்கி, மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளிலும் இந்தியா தொடர்பான சாதகமான பார்வை குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.