சர்வதேச யோகா தின விழாவில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் பங்கேற்பு.!!!
சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற 12ஆவது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில், சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.
இந்திய சமூக அமைப்பான திஷா (DISHA) ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு, சவூதி அரேபியாவிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் சவூதி அரேபிய விளையாட்டு அமைச்சின் சவூதி யோகா குழுவின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.
விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பொதுவான யோகா நெறிமுறைகளை செயல்முறைப்படுத்திக் காட்டினர். இதன் மூலம் யோகாவின் உலகளாவிய முக்கியத்துவம், ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நல்வாழ்வு குறித்த அதன் செய்தி வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத், மன அழுத்தமும் பதற்றமும் அதிகரித்து வரும் இன்றைய உலகில் சமநிலை, உள் அமைதி, சுய ஒழுக்கம் மற்றும் இரக்கம் போன்ற மனிதநேயப் பண்புகளை யோகா ஊக்குவிப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், யோகா இந்தியாவில் தோற்றம் பெற்றிருந்தாலும், பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மரபுகளால் செழுமைப்படுத்தப்பட்ட இலங்கையின் ஆன்மீக மற்றும் கலாசார பாரம்பரியத்திலும் அதன் தாக்கம் ஆழமாகப் பதிந்துள்ளதாகவும், விழிப்புணர்வு, உள் அமைதி, மிதவாதம் மற்றும் இணக்கமான வாழ்வு போன்ற உயரிய விழுமியங்கள் இலங்கை சமூகத்தில் நீண்டகாலமாகப் பேணப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சவூதி யோகா குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி இஞ்சினியர் அகமது அல்சாதி, இந்திய தூதரகத்தின் துணைத் தலைவர் அபூ மேத்தன் ஜார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.







