மின்னஞ்சல் ஊடுருவல் மூலம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பண மோசடி: டுபாய், சென்னை அலுவலகங்கள் தொடர்பில் விசாரணை.!!!
டுபாயை தளமாகக் கொண்ட சேவை வழங்குநரின் மின்னஞ்சல் கணக்கு மூன்றாம் தரப்பினரால் ஊடுருவப்பட்டதால் நிதி முறைகேடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டிய 9 இலட்சத்து 74 ஆயிரம் ஐக்கிய அரபு அமீரக திர்ஹம்ஸ் தொகை கிடைக்கவில்லை என டுபாயில் உள்ள சேவை வழங்குநர் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடாக இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து டுபாய் மற்றும் இந்தியாவின் சென்னை அலுவலகங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் உத்தியோகபூர்வ விளக்கமளித்துள்ளது.
மின்னஞ்சல் ஊடுருவல் காரணமாக போலியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், உண்மையான சேவை வழங்குநருடன் தான் தொடர்பில் உள்ளதாக நம்பி அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பின்னர் மின்னஞ்சல் ஊடுருவல் கண்டறியப்பட்டதும் அந்த வங்கிக் கணக்கிற்கு மேலதிக பணப்பரிவர்த்தனைகள் உடனடியாக நிறுத்தப்பட்டதுடன், டுபாய் அதிகாரிகளுக்கும் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்னஞ்சல் ஊடுருவல் சேவை வழங்குநரின் கட்டுப்பாட்டிற்குள் இடம்பெற்றதாகவும், எனவே பணம் கிடைக்காததற்கான பொறுப்பை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஏற்க முடியாது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இந்தியாவின் சென்னை அலுவலகத்தில் உள்ள நிதிப் பிரிவில் பணியாற்றிய சில இந்திய ஊழியர்கள் போலிப் பட்டியல்கள் மற்றும் போலிக் கையெழுத்துகளை பயன்படுத்தி நீண்டகாலமாக சுமார் 22 மில்லியன் இந்திய ரூபாவை மோசடி செய்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைமை அலுவலகம் வழக்கத்திற்கு மாறான பணப் பரிமாற்றங்களை அவதானித்ததையடுத்து உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த விசாரணைகளின் பின்னர் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணிக்கு வராமல் தவிர்த்துள்ளதுடன், அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் இந்திய சட்ட அமுலாக்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இழப்பீட்டை மீட்டெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.