நெல்லுக்கு நிலையான விலை; சிறு, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு.!!!
• விவசாயிகளுக்கு நியாயமான விலை வழங்க புதிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்.
நெல்லுக்கு நிலையான விலையைப் பெற்றுக்கொடுப்பதுடன், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, அரிசி ஆலைத் துறையில் செயற்படும்போது தாம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.
குறிப்பாக, நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஈட்டுக் கடன் முறைமையின் கீழ் வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும்போது எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்தும் ஜனாதிபதிக்கு அவர்கள் விளக்கமளித்தனர்.
நெல் கொள்வனவுக்காக மாவட்டச் செயலாளர் அல்லது பிரதேச செயலாளர் ஊடாக நிதி ஒதுக்கீடுகளை வழங்கும் வகையிலான வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறும் இதன்போது பரிந்துரை முன்வைக்கப்பட்டது.
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்குத் தங்களிடம் போதுமான கொள்ளளவு இருப்பதாகவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், விவசாயிகளுக்கு நிலையான விலையை வழங்குவதற்கும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை பெற்றுக்கொடுப்பதற்கும் சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களின் பங்களிப்பை வலுப்படுத்துவது சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
நெல் கொள்வனவு மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நியாயமான விலைச் சூழலை உருவாக்குவது தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.