பேரூந்துகளில் மண்ணெண்ணெய் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை.!!!
• நாடு முழுவதும் பொலிஸாரின் திடீர் சோதனை; சுமார் 100 பேரூந்துகள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.
பயணிகள் பேரூந்துகளில் டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் (Kerosene) பயன்படுத்தப்படுவது தொடர்பில் நாடு முழுவதும் இலங்கை பொலிஸார் விசேட திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளில், மண்ணெண்ணெயில் இயக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 100 பயணிகள் பேரூந்துகள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், சந்தேகத்திற்குரிய பல பேரூந்துகளிலிருந்து எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
டீசலுடன் ஒப்பிடும்போது மண்ணெண்ணெயின் விலை குறைவாக இருப்பதால், கூடுதல் இலாபம் ஈட்டும் நோக்கில் சில பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் டீசலுடன் மண்ணெண்ணெயைக் கலந்து பயன்படுத்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு மண்ணெண்ணெயைப் பயன்படுத்துவது வாகன எஞ்சின்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் அதிகரிப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, கேன்கள் அல்லது கொள்கலன்களில் வழமையை விட அதிகளவில் மண்ணெண்ணெய் வாங்குவோரைக் குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும், பேரூந்துகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கவோ அல்லது அதற்கு துணைபுரியவோ கூடாது என்றும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு எச்சரித்துள்ளது.
அண்மையில் கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில், மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட மூன்று பயணிகள் பேரூந்துகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலப்பகுதியிலிருந்தும், தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காலகட்டத்திலும், கல்முனை பிராந்தியத்தில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சில தனியார் பேரூந்துகள் மற்றும் கனரக வாகனங்களில் மண்ணெண்ணெய் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், திடீர் சோதனைகளின் போது 100 லீட்டருக்கும் அதிகமான மண்ணெண்ணெய் கேன்களுடன் பல தனியார் பேரூந்து வாகனங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

