காத்தான்குடி தள வைத்தியசாலையில் திடீர் தீ விபத்து – ஊழியர்களின் துரித நடவடிக்கையால் பெரும் அனர்த்தம் தவிர்ப்பு.!!!
—எம்.ரி.எம்.யூனுஸ்—
காத்தான்குடி தள வைத்தியசாலையில் இன்று (27) ஏற்பட்ட திடீர் தீப்பரவல், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் விரைவான செயல்பாட்டினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசரமாக சம்பவ இடத்துக்கு விரைந்த ஊழியர்கள் தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்ததுடன், பாதுகாப்பு தரப்பினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்த துரித நடவடிக்கையினால் பெரும் சேதங்களும் அசம்பாவிதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்தினால் குறைந்தளவிலான சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் எவ்வித தடையுமின்றி வழமை போன்று தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






