மட்டக்களப்பில் திடீர் சோதனை நடவடிக்கை: ஐந்து மதுபான விற்பனை நிலையங்கள் முற்றுகை.!!!
கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவொன்று புதன்கிழமை (01) மாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில மதுபான விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, சட்டத்துக்கு முரணான வகையில் விற்பனை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மதுபான போத்தல்கள் அடங்கிய பல பெட்டிகளை பறிமுதல் செய்துள்ளது.
விசேட பொலிஸ் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமாக விநியோகிக்கப்படும் மதுபானங்களில் குறிப்பிடத்தக்க அளவு மட்டக்களப்பிலிருந்து விநியோகிக்கப்படுவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் இலக்காகக் கொண்டு சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து மதுபான விற்பனை நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு சோதனையிடப்பட்டதுடன், சந்தேகத்திற்கிடமான மதுபான போத்தல்கள் அடங்கிய பல பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுவரித் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கவுள்ளதாக சம்பவ இடத்தில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விசேட பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் விநியோக வலையமைப்பை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் இவ்வாறான திடீர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.