தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி ‘கூட்டு சாம்பார்’; தேசிய மக்கள் சக்தி அரசை அசைக்க முடியாது – அமைச்சர் சந்திரசேகர்.!!!
தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, வெறும் “கூட்டு சாம்பார்” போன்றதாகவே மாறும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது என தெரிவித்த அவர், இந்தக் கூட்டணி எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காகவும், மோசடிகளைத் தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காகவும் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டதா அல்லது ஊழல் செய்பவர்களையும் மோசடிகளில் ஈடுபட்டவர்களையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதா என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
மேலும், குறித்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில அரசியல் தலைவர்கள் தொடர்பில் கடந்த காலங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும், தற்போது பிணையில் உள்ளவர்களே அதிகமாக உள்ளதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சுட்டிக்காட்டினார்.