தொலைபேசி இணைப்பு கம்பிகள் வெட்டி செம்பு திருட்டு – இருவர் கைது.!!!
ஹட்டன், நோர்வூட், மாஸ்கெலியா மற்றும் காசல்ரீ பகுதிகளில் தொலைபேசி இணைப்பு கம்பிகளை வெட்டி அவற்றில் உள்ள செம்பை திருடி விற்பனை செய்ததாக இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் டெலிகொம் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட தொலைபேசி இணைப்பு கம்பிகள் தொடர்ச்சியாக வெட்டி அகற்றப்பட்டு வந்ததாகவும், இது தொடர்பாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் அதிகாரிகள் புகார் அளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகரவின் அறிவுறுத்தலின்பேரில், ஹட்டன் தலைமையக தலைமை ஆய்வாளர் மேற்பார்வையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகளில், இரவு நேரங்களில் வாகனங்களில் வந்து தொலைபேசி கம்பிகளை வெட்டி எரித்து அதிலிருந்த செம்பை பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், நோர்வூட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் ரூ. 4 மில்லியன் மதிப்புள்ள தொலைபேசி கம்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், திருடப்பட்ட கம்பிகளை உருக்கி பெறப்பட்ட செம்பு ஒரு கிலோ ரூ. 2,500க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 51 மற்றும் 28 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.