கல்லடிப் பாலத்தில் பதற்றம்; கழுத்தில் பலத்த காயமடைந்த நபர் அவசர சிகிச்சைக்கு.!!!
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் மீது வெள்ளிக்கிழமை (10) நண்பகல், 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கூரிய பிளேட்டைப் பயன்படுத்தி தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்ட நிலையில், அங்கு கடமையில் இருந்த பொலிஸாரின் துரித நடவடிக்கையால் உயிருடன் மீட்கப்பட்டார்.
சம்பவத்தை நேரில் அவதானித்த கல்லடிப் பாலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், உடனடியாக தலையிட்டு குறித்த நபரைத் தடுத்து நிறுத்தி காப்பாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், கழுத்தில் ஏற்பட்ட ஆழமான காயம் காரணமாக அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அவர் அவசரமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தையடுத்து கல்லடிப் பாலத்தில் சில மணிநேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பதற்றமான சூழலும் நிலவியது. மேலதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த நபர் இவ்வாறான செயலுக்கு எதனால் முயன்றார் என்பது இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.