ஜனாதிபதி தலைமையில் தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் திறப்பு; 25,000 குடும்பங்களுக்கு புதிய நீர் இணைப்பு.!!!
தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 91,810 மக்களுக்கு நன்மையளிக்கும் தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
சீன அபிவிருத்தி வங்கி (CDB) வழங்கிய சலுகைக் கடன் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும், அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.
இப்பகுதியில் பரவி வரும் நாட்பட்ட சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம், 25,000 வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்புகளை வழங்கும் இலக்குடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 32 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், நாளொன்றுக்கு 18,000 கன மீட்டர் திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம், தலா 1,500 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று நீர் தாங்கிகள், 12.75 கிலோமீட்டர் நீளமான பிரதான நீர்க் குழாய் மற்றும் 158 கிலோமீட்டர் நீளமான விநியோகக் குழாய் வலையமைப்பு அடங்குகின்றன.
நிகழ்வில் உரையாற்றிய வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, கடந்த பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளின் வரவு-செலவுத் திட்டங்களில் நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து நீர் பெற்றுக்கொள்வது தொடர்பாக விவசாயிகள் முன்வைத்த கவலைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், விவசாயத்திற்கான நீர் விநியோகத்தில் எந்தவித குறைபாடும் ஏற்பட அனுமதிக்கப்படமாட்டாது என்றும் அவர் உறுதியளித்தார்.
நீர்ப்பற்றாக்குறை அல்லது திட்டத்தால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால் அரசாங்கம் உரிய இழப்பீட்டை வழங்கும் என்றும், கடந்த காலங்களில் வறட்சி மற்றும் பிற காரணங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், கினிப்பெட்டி பாலம் தொடர்பாக மக்களின் கோரிக்கையை ஏற்று, சுமார் 24 கோடி ரூபா செலவில் புதிய வாகனப் பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பழைய பாலத்தை புனரமைப்பதா அல்லது புதிய பாலம் அமைப்பதா என்பது குறித்து நிபுணர் குழுவின் ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, சீன தூதுவர் கி ஜென் ஹொங் (Qi Zhenhong), தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள், அமைச்சு அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.






