சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து இல்லை; உணவை அவர் தானே மறுக்கிறார் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.!!!
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே தொடர்பான விவகாரம் மற்றும் அவரது உடல்நிலை குறித்து சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம் அளித்துள்ளார்.
சுரேஷ் சலேவுக்கு உணவு வழங்கப்படாமல் இருப்பதாக வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்த அமைச்சர், அவர் வாய்மூலமாக உணவை உட்கொள்ள மறுத்து வருவதாகக் கூறினார்.
தேசிய வைத்தியசாலையின் பரிந்துரையின் அடிப்படையில், மூக்கு வழியாக செலுத்தப்பட்டுள்ள குழாய் ஊடாக அவருக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் மற்றும் திரவ உணவுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், சுரேஷ் சலேவின் வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை அவரது மனைவியே அந்தக் குழாய் மூலம் அவரது வயிற்றுக்குச் செலுத்தி வருவதாகவும், அது போதுமானதாக இல்லையெனில் மேலதிக உணவுகளை கொண்டு வருமாறு அறிவிக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சுரேஷ் சலே தற்போது முழுமையான சுயநினைவுடன் இருப்பதுடன், சாதாரணமாக ஆடை அணிந்து நடமாடும் உடல் தகுதியுடனும் உள்ளதாக அமைச்சர் கூறினார். எனவே, அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
அவரை விடுதலை செய்யக் கோரி வெளியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதோ அல்லது ஊடக சந்திப்புகள் ஏற்பாடு செய்வதோ பயனற்ற நடவடிக்கைகள் எனக் குறிப்பிட்ட அமைச்சர், பிரச்சினையின் மையம் உணவு வழங்கப்படாமை அல்ல; அவர் உணவை உட்கொள்ள மறுப்பதே என தெரிவித்தார்.
“வெளியில் போராட்டங்கள் நடத்துவதையோ, மத நிகழ்வுகள் ஏற்பாடு செய்வதையோ விடுத்து, அவரது மனைவியும் பிள்ளைகளும் சென்று உணவை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தினால், இந்தப் பிரச்சினை உடனடியாக முடிவுக்கு வரும்” என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.