ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் ‘கெம்பா’ உட்பட மூவர் கைது.!!!
திருகோணமலையில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் குற்றக் கும்பலுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள், ஐஸ் போதைப்பொருள் மற்றும் இரண்டு வாள்களுடன் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 14 ஆம் திகதி உப்புவெளி மின்சார நிலைய வீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, ‘கெம்பா’ என்ற புனைப்பெயரால் அறியப்படும் முக்கிய சந்தேகநபர் உட்பட மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முக்கிய சந்தேகநபரிடமிருந்து 16 கிராம் ஐஸ் போதைப்பொருளும், இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற இருவரில் ஒருவரிடம் 8 கிராம் மற்றும் மற்றொருவரிடம் 7 கிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், அச்சுறுத்தி பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களுக்கு எதிரான முந்தைய குற்றச்சாட்டுகள் தொடர்பிலும், போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் 54ஆம் பிரிவின் கீழ் போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உப்புவெளி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

