கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
கற்பிட்டி தழுவை கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அலைகளில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் சனிக்கிழமை (06) மாலை இடம்பெற்றுள்ளது.
புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்த இரு இளம் பெண்களும், ஒரு இளைஞருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினருடன் தழுவை கடற்கரைக்கு சென்ற அவர்கள், கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் திடீரென வீசிய பலத்த காற்றினால் ஏற்பட்ட பாரிய அலைகளில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் மீட்புக் குழுவினர் மேற்கொண்ட தீவிர முயற்சிகளின் பின்னர் மூவரின் உடல்களும் கரைக்கு கொண்டு வரப்பட்டன. எனினும், அவர்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் 25 வயதுடைய இளைஞர் ஒருவரும், 18 மற்றும் 19 வயதுடைய இரு இளம் பெண்களும் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.