விலைவாசி உயர்வுக்கு எதிராக தீப்பந்த போராட்டம்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு, மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் எரிவாயு விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பில் சனிக்கிழமை (06) இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
“மக்களுக்கு சலுகை கொடு” என்ற பிரதான தொனிப்பொருளின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீர்கொழும்பு போரதோட்ட கடற்கரை மைதானத்தில் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மக்களின் அன்றாட வாழ்வை கடுமையாகப் பாதித்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த தீப்பந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நீர்கொழும்பு அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் காவிந்த ஜயவர்தன தலைமை தாங்கினார்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.