கல்முனை வடக்கு வைத்தியசாலை ஆடைச் சர்ச்சை: பணிப்பாளர் உட்பட ஐவரை ஆஜராகுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பு.!!!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட ஐந்து பேரை விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த விசாரணைகள் எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்கள், தங்களது கலாசார ஆடையை அணிந்து பணியாற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டதாகக் கூறி, கடந்த வாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆறு முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே குறித்த அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழைப்பாணை வைத்தியசாலை நிர்வாகத்துக்கு கிடைத்த பின்னரே, குறித்த முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கும் கடிதம் கையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.