மொனராகலை உனட்டுவில் துயர விபத்து: தந்தை பலி – மனைவி, இரண்டு பிள்ளைகள் படுகாயம்.!!!
–கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ் –
மொனராகலை மாவட்டத்தின் வெள்ளவாய – கொழும்பு பிரதான வீதியில் உள்ள உனட்டுவ பகுதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து புதன்கிழமை (15) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறையைச் சேர்ந்த ஒரு குடும்பம் முச்சக்கர வண்டியில் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில், எதிரே வந்த கே.டி.எச் ரக வேனுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் பயணித்துக் கொண்டிருந்தனர்.
விபத்தில் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக புத்தல பிராந்திய மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் அம்பாறை பகுதியைச் சேர்ந்த நிஷாந்த தேவப்பிரிய பண்டாரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.