ஆடை சர்ச்சையால் இடமாற்றம்; 9 பெண் ஊழியர்களுக்கு அஷ்ரஃப் வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்பு.!!!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஆடை தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட 9 முஸ்லிம் பெண் உதவி தாதியர் பயிற்சி ஊழியர்களுக்கு, கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஊழியர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 9 முஸ்லிம் பெண் உதவி தாதியர் பயிற்சி ஊழியர்கள் அணிந்திருந்த ஆடை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை, கடந்த சில நாட்களாக சமூக மற்றும் அரசியல் மட்டங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சரின் உத்தரவின் பேரில் குறித்த 9 பெண் ஊழியர்களும் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த இடமாற்றத் தீர்மானம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, முஸ்லிம் பெண்களின் ஆடை உரிமை மற்றும் அரச நிறுவனங்களில் இன, மத வேறுபாடின்றி சம உரிமை வழங்கப்பட வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தற்காலிகமாக அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட 9 பெண் ஊழியர்களும் இன்று (19) கடமைக்காக வைத்தியசாலைக்கு வருகை தந்தனர்.
இதன்போது, அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஊழியர்கள் அவர்களுக்கு மாலை அணிவித்து அன்புடனும் உற்சாகத்துடனும் வரவேற்பளித்தனர்.
குறித்த வரவேற்பு நிகழ்வின் நெகிழ்ச்சியான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

