திறைசேரி உதவி பணிப்பாளர் மரணம் – தற்கொலை என மருத்துவ அறிக்கை.!!!
உயிரிழந்த திறைசேரி உதவி பணிப்பாளரின் உடலுக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் அடிப்படையில், அந்த மரணம் தற்கொலையால் ஏற்பட்டது என சட்ட மருத்துவ ஆலோசகர்கள் குழு வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை திறைசேரியின் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றிய பெண்ணின் மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சட்ட மருத்துவப் பரிசோதனையின் (Post-mortem) முக்கிய முடிவுகளின் அடிப்படையில், குறித்த மரணம் தற்கொலையினால் ஏற்பட்டதாக மருத்துவக் குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், அவரது உடலில் காணப்பட்ட காயங்கள் அனைத்தும் மற்றுமொரு நபரால் ஏற்படுத்தப்பட்டவை அல்ல என்றும், அவை அவராலேயே ஏற்படுத்திக் கொண்ட காயங்கள் என்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பாக நிலவிய சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக விசேட சட்ட மருத்துவ அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
