முச்சக்கர வண்டி விபத்து: 2 பேர் உயிரிழப்பு; 3 பாடசாலை மாணவர்கள் படுகாயம்.!!!
நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகே இன்று (22) காலை சுமார் 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன், மூன்று பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
நல்லதண்ணி பொலிஸாரின் தகவலின்படி, விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியும் மற்றொரு பயணியுமாக இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மூன்று பாடசாலை மாணவர்கள் உடனடியாக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நிகழ்ந்த வேளையில் முச்சக்கர வண்டியில் மொத்தம் ஐந்து பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததால் பாதையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


