ஹெரோயின் விற்பனையாளர்கள் இருவர் கைது; பொலிஸார் அதிரடி நடவடிக்கை.!!!
• இலத்திரனியல் தராசுடன் ஹெரோயின் மீட்பு – பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவரும் சிக்கினார்.
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது மற்றும் கல்முனைக்குடி பகுதிகளில் நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் இருவர் சாய்ந்தமருது பொலிஸாரினால் திங்கட்கிழமை (10) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே, கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 44 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 2,400 மில்லிகிராம் மற்றும் 2,970 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளை நிறுப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மைக்ரோ ரக நவீன இலத்திரனியல் தராசு ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த கைது நடவடிக்கையின்போது கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையிலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எஸ். இந்திக தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்களான ஜெயசிங்க (63373), அத்துவர் (91775) மற்றும் பொலிஸ் உதவியாளர் ரசூல் ஆகியோர் அடங்கிய குழுவினரால் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களுடன் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.



